Wednesday, October 19, 2011

காதலின் ரகசியம்

பேசுவதற்க்கு எதுவும் இல்லாமலே
மணிக்கணக்கில் பேசுவது எப்படி என்பது
காதலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

சிந்திய மை

பிரம்மன் உன்னை படைத்துக் கொண்டிருந்த பேனாவில் மை சிந்தியதால்
நான் உருவானேன்...

தெய்வம்

என் சுவாசத்தை உள் இழுத்து கண்கள் திறக்கும் அந்த நொடி,
என் முன் அவள்..
அவள் அழுகையை பிரம்மன் கேட்டால், அவளை ஊமையாகப் படைத்திருப்பான்..
கெஞ்சினாள்.. திட்டினாள்.. வேண்டினாள்..
நான் செவிசாய்க்கவில்லை...!


என் நெஞ்சம் கல்லாய் மாறும் சப்தம் எனக்குக் கேட்கின்றது..
என் மனமும் ஆற்றலும் இடும் சண்டை என்னை குழப்புகிறது..

மறுமுறை கண்கள் திறந்த போது,
என்னை எள்ளி நகைத்த எண்ணங்களையும், ஏறி மிதித்த மனதின் ஓலங்களையும்,
புறந்தள்ளி சாம்பலாக்கினேன்..

என் பணியாட்களை ஏவினேன்:
"அசையாது பிடியுங்கள் அவளை, கட்டுங்கள் அவள் கைகளை" என்று..
மனதை திடமாக்கி அந்த காரியம் செய்தேன்..
அவள் எமனின் நிழல் தொட்டுக் கதறினாள்...


மறு நொடி - எங்கும் மௌனம், எங்கெங்கும் மௌனம்..
குருதியில் சிவந்து நடுங்கும் என் கரங்களில் மட்டும்,
மேகக் குவியலாய், முயல் குட்டியாய், ஒரு பிஞ்சு தெய்வம்!
இப்போது கர்வத்தில் நான் - முதல் பிரசவம் பார்த்த மருத்துவச்சியாய்!!

ஆசை

என்னையே எனக்கு காட்டிய உன் விழிகளால்,
நான் என்னை காதலிக்க ஆசைப்படுகிறேன்..!!

Tuesday, October 18, 2011

அவளுக்காக ஒரு தினம்

கடவுளின் குழந்தையாய் மண்ணில் வந்தாய்..
சுற்றார் உறவினர் என எல்லோரையும் புன்னகையால் பூக்க வைத்தாய்..

கண்ணதாசன் கவிதை வரி குமரியாய் வளர்ந்து நிற்கின்றதோ?
என எண்ணத் தோன்றும் உன் துள்ளலை பார்த்தால்..

உனக்கு உவமையாக மயிலை படைக்கவோ?
என்று கடவுளை என்ண வைத்தது உன் இளமை...

அழகில் கர்வம் கொள்ளவோ, பெருமை கொண்டு வானில் மிதக்கவோ,
நேரம் இன்றி எத்துணை தடைகளை உடைத்தாய்??

படிப்பில் மாணவர்களை வென்று,
பண்பில் ஆண்களை வென்று,
திறமையில் வேலைகளை வென்று,
துணிவில் உலகத்தை வெல்லும் ஆற்றல் இருந்தும்,
காலத்தின் சுழற்சியை ஏற்று
உன் உலகமாக ஓர் ஆண் மகனின் கரம் பற்றி,
அவனை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றாய்..

இவளே மீண்டும் பிறந்தாளோ??
கடவுளின் உருவமாய், அழகின் ஓவியமாய்,
ஓர் உயிரை உருவாக்கிய தேவதையாய்
சேயுடன்  புன்னகைக்கிறாள் தாயாய்...

பசி, தூக்கம் எல்லாம் மறந்து..
ஆசை, தேவை யாவும் துறந்து..
குடும்பத்திர்க்காக அந்த அம்புலியை போல் தேய்கிறாள் அவள்...

வாழ்க்கை முழுவதும் பிறருக்காக வாழ்ந்து,
இதோ முடிந்தன நம் கடமைகள்,
இனி கொண்டாடுவோம் என நின்று நோக்கும் அந்த நொடி,
உயிரின் அத்யாயங்களின் கடைசி பக்கங்களில் நிற்கும்  வாழ்க்கை..
இருந்தும் அதன் ஏமாற்றம் சிறிதும் இன்றி
எப்போதும் சிரித்துக்கொண்டே உள்ளங்களை
கொள்ளைகொண்டாய் கண்ணே..

வாழ்க்கை வாழ்பவர்க்கே என நினைக்கும் மற்றவர் மத்தியில்,
மற்றவர்க்கு வாழ்வதே வாழ்க்கை என நினைக்கும் பெண்ணிற்கு
உலகமே கொண்டாடும் ஓர் தினம் - இந்த மகளிர் தினம்!!